காலமறிதல்(Kaalamaridhal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #481 #482 #483 #484 #485 #486 #487 #488 #489 #490
குறள் #481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Tamil Transliteration
Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

பொருள்
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

Tamil Transliteration
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

பொருள்
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

Tamil Transliteration
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

Tamil Transliteration
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

Tamil Transliteration
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள்
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Ookka Mutaiyaan Otukkam Porudhakar
Thaakkarkup Perun Thakaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

Tamil Transliteration
Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பொருள்
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

Tamil Transliteration
Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

Tamil Transliteration
Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

Tamil Transliteration
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu.

மேலதிக விளக்கங்கள்
🡱