குறள் (Kural) - 485

குறள் (Kural) 485
குறள் #485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

Tamil Transliteration
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar.

மு.வரதராசனார்

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

கலைஞர்

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

பரிமேலழகர்

கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஞாலம் கருதுபவர் - உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர் ; கலங்காது - மனக்கலக்கமின்றி ; காலம் கருதிஇருப்பர் - தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி , அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர் . 'கலங்காது' என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும் . நட்பாக்கல் , பகையாக்கல் , பிரித்தல் , கூட்டல் , மேற் செல்லல் , இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள் , இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை , 'காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது' , என்பராதலின் , 'காலங் கருதியிருப்பர் 'என்றார் .

மணக்குடவர்

செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

புலியூர்க் கேசிகன்

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)