புலால் மறுத்தல்(Pulaanmaruththal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #251 #252 #253 #254 #255 #256 #257 #258 #259 #260
குறள் #251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

Tamil Transliteration
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருள்
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.

Tamil Transliteration
Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

பொருள்
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.

Tamil Transliteration
Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

பொருள்
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

Tamil Transliteration
Arulalladhu Yaadhenin Kollaamai Koral
Porulalladhu Avvoon Thinal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

பொருள்
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.

Tamil Transliteration
Unnaamai Ulladhu Uyirnilai Oonunna
Annaaththal Seyyaadhu Alaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

பொருள்
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

Tamil Transliteration
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril.

மேலதிக விளக்கங்கள்
குறள் #257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

பொருள்
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

Tamil Transliteration
Unnaamai Ventum Pulaaal Piridhondran
Punnadhu Unarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

பொருள்
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

Tamil Transliteration
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon.

மேலதிக விளக்கங்கள்
குறள் #259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

பொருள்
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

Tamil Transliteration
Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பொருள்
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

Tamil Transliteration
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum.

மேலதிக விளக்கங்கள்
🡱