ஒற்றாடல்(Otraatal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #581 #582 #583 #584 #585 #586 #587 #588 #589 #590
குறள் #581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

பொருள்
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

Tamil Transliteration
Otrum Uraisaandra Noolum Ivaiyirantum
Thetrenka Mannavan Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

பொருள்
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

Tamil Transliteration
Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum
Vallaridhal Vendhan Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

பொருள்
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

Tamil Transliteration
Otrinaan Otrip Poruldheriyaa Mannavan
Kotrang Kolakkitandhadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அ
னைவரையும் ஆராய்வது ஒற்று.

பொருள்
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

Tamil Transliteration
Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பொருள்
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

Tamil Transliteration
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum
Ukaaamai Valladhe Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

பொருள்
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

Tamil Transliteration
Thurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu
Enseyinum Sorviladhu Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

பொருள்
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

Tamil Transliteration
Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

பொருள்
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

Tamil Transliteration
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

பொருள்
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

Tamil Transliteration
Otrer Runaraamai Aalka Utanmoovar
Sotrokka Therap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #590
சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

பொருள்
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

Tamil Transliteration
Sirappariya Otrinkan Seyyarka Seyyin
Purappatuththaan Aakum Marai.

மேலதிக விளக்கங்கள்
🡱