மருந்து(Marundhu)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #941 #942 #943 #944 #945 #946 #947 #948 #949 #950
குறள் #941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

Tamil Transliteration
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

Tamil Transliteration
Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

Tamil Transliteration
Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #944
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

பொருள்
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.

Tamil Transliteration
Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.

Tamil Transliteration
Maarupaatu Illaadha Unti Maruththunnin
Oorupaatu Illai Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

பொருள்
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை.

Tamil Transliteration
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

பொருள்
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.

Tamil Transliteration
Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).

Tamil Transliteration
Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

பொருள்
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

Tamil Transliteration
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

பொருள்
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.

Tamil Transliteration
Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu.

மேலதிக விளக்கங்கள்
🡱