நீத்தார் பெருமை(Neeththaar Perumai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #21 #22 #23 #24 #25 #26 #27 #28 #29 #30
குறள் #21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

Tamil Transliteration
Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu
Ventum Panuval Thunivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள்
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

Tamil Transliteration
Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள்
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

Tamil Transliteration
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

பொருள்
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

Tamil Transliteration
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

பொருள்
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

Tamil Transliteration
Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan
Indhirane Saalung Kari.

மேலதிக விளக்கங்கள்
குறள் #26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பொருள்
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

Tamil Transliteration
Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

Tamil Transliteration
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பொருள்
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

Tamil Transliteration
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள்
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Tamil Transliteration
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

Tamil Transliteration
Andhanar Enpor Aravormar Revvuyir Kkum
Sendhanmai Poontozhuka Laan.

மேலதிக விளக்கங்கள்
🡱