கடவுள் வாழ்த்து(Katavul Vaazhththu)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #1 #2 #3 #4 #5 #6 #7 #8 #9 #10
குறள் #1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

Tamil Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

Tamil Transliteration
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Tamil Transliteration
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Tamil Transliteration
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila.

மேலதிக விளக்கங்கள்
குறள் #5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள்
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்..

Tamil Transliteration
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொருள்
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

Tamil Transliteration
Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka
Nerinindraar Neetuvaazh Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

Tamil Transliteration
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள்
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Tamil Transliteration
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பொருள்
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

Tamil Transliteration
Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பொருள்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

Tamil Transliteration
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱