பேதைமை(Pedhaimai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #831 #832 #833 #834 #835 #836 #837 #838 #839 #840
குறள் #831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

பொருள்
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

Tamil Transliteration
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

பொருள்
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

Tamil Transliteration
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

பொருள்
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.

Tamil Transliteration
Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum
Penaamai Pedhai Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

பொருள்
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.

Tamil Transliteration
Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap
Pedhaiyin Pedhaiyaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

பொருள்
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.

Tamil Transliteration
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum
Thaanpuk Kazhundhum Alaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

பொருள்
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

Tamil Transliteration
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

பொருள்
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

Tamil Transliteration
Edhilaar Aarath Thamarpasippar Pedhai
Perunjelvam Utrak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

பொருள்
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

Tamil Transliteration
Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan
Kaiyondru Utaimai Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

பொருள்
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

Tamil Transliteration
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril.

மேலதிக விளக்கங்கள்
குறள் #840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

பொருள்
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

Tamil Transliteration
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal.

மேலதிக விளக்கங்கள்
🡱