படைச் செருக்கு(Pataichcherukku)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #771 #772 #773 #774 #775 #776 #777 #778 #779 #780
குறள் #771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பொருள்
போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்.

Tamil Transliteration
Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பொருள்
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

Tamil Transliteration
Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பொருள்
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

Tamil Transliteration
Peraanmai Enpa Tharukanon Rutrakkaal
Ooraanmai Matradhan Eqku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

பொருள்
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

Tamil Transliteration
Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பொருள்
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

Tamil Transliteration
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

Tamil Transliteration
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul
Vaikkumdhan Naalai Etuththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

பொருள்
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

Tamil Transliteration
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

பொருள்
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

Tamil Transliteration
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

பொருள்
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

Tamil Transliteration
Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

பொருள்
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

Tamil Transliteration
Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu
Irandhukol Thakkadhu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
🡱