ஈகை(Eekai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #221 #222 #223 #224 #225 #226 #227 #228 #229 #230
குறள் #221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

Tamil Transliteration
Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பொருள்
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

Tamil Transliteration
Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

பொருள்
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

Tamil Transliteration
Ilanennum Evvam Uraiyaamai Eedhal
Kulanutaiyaan Kanne Yula.

மேலதிக விளக்கங்கள்
குறள் #224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

பொருள்
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

Tamil Transliteration
Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பொருள்
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

Tamil Transliteration
Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

Tamil Transliteration
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

பொருள்
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

Tamil Transliteration
Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

பொருள்
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

Tamil Transliteration
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

Tamil Transliteration
Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

பொருள்
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

Tamil Transliteration
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai.

மேலதிக விளக்கங்கள்
🡱