குறள் (Kural) - 477

குறள் (Kural) 477
குறள் #477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

பொருள்
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

Tamil Transliteration
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri.

மு.வரதராசனார்

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

கலைஞர்

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

பரிமேலழகர்

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம். (ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் அளவறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக ஈக ; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அதுவே செல்வத்தைப் பேணிக்காத்து ஈந்தொழுகும் வழியாம் . மேல் 'ஈகை' என்றும் (382) 'வகுத்தலும்' (385) என்றும் 'கொடை' (390) என்றும் , சொல்லப்பட்ட ஈகைவகைகட்குச் செலவிடவேண்டிய பொருளளவு இங்குக் கூறப்பட்டது . "வருவாயுட்கால் வழங்கி வாழ்தல்" (திரிகடுகம் , 21) என்பதால் , அரசன் தன் மொத்த வருமானத்தில் அரைப்பகுதியை ஆட்சிச் செலவிற்கும் , காற்பகுதியை எதிர்பாராவாறு இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழக் கூடிய இடர் வந்த விடத்து அதை நீக்கும் ஏமவைப்பிற்கும் , ஒதுக்கி , எஞ்சிய காற்பகுதியை ஈகைக்குப் பயன்படுத்த வேண்டுமென்பது பெறப்படும் . இங்ஙனஞ் செய்யின் , செலவிடும் பொருளின் அளவீட்டினாலும் செய்யும் அறத்தின் பயனாலும் செல்வம் பேணிக்காக்கப்படுமாதலின் , அதைப் 'பொருள் போற்றிவழங்கு நெறி 'என்றார் . இங்ஙனமன்றி , வந்ததையெல்லாம் வழங்கிக்கொண்டிருப்பின் ,வித்துக்குற்றுண்பவன் போலும் வலியறியாது போர்க்குச் செல்வான்போலும் விரைந்து கெடுவான் என்பது கருத்து . "வளவனாயினும் அளவறிந் தளித்துண்" , என்பது இங்குக் கவனிக்கத்தக்கது .

மணக்குடவர்

பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வலியறிதல் (Valiyaridhal)