குறள் (Kural) - 476

குறள் (Kural) 476
குறள் #476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

Tamil Transliteration
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum.

மு.வரதராசனார்

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

கலைஞர்

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

பரிமேலழகர்

கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும். ('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒரு மரத்தின் உச்சிக்கிளையில் ஏறிநின்றவர் தம் ஊக்கத்தினால் அதன் மேலும் ஏற முயல்வாராயின் ; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அம்முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்து விடும் . நுனிக்கொம்பர் என்றது உச்சாணிக் கொம்பை . 'நுனி' இங்கு மரத்தின் நுனி ; கிளையின் நுனியன்று . தாழ்ந்த கிளைநுனியாயின் ஒருவர் சாவிற்குத்தப்பலாம் . உச்சிக்கிளையினின்று விழுந்தவர் தப்ப முடியாது . பகைமேற் சென்று முற்றுகையிட்டவன் பல அரண்களைக் கடந்து தான் செல்லுமளவு சென்றதோடமையாது , மேலும் புகுந்து கைப்பற்றற்கரிய உள்ளரணை யடைவானாயின் , அவன் கொலையுண்டிறப்பது திண்ணம் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் , இதுவும் பிறிதுமொழித லணியாம் . 'அர்' 'ஓர்' இலக்கியச் சொல்வளர்ச்சியீறு . வினைவலி யறியாமையின் தீங்கு இங்குக் கூறப்பட்டது .

மணக்குடவர்

ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவு சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.

புலியூர்க் கேசிகன்

மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வலியறிதல் (Valiyaridhal)