குறள் (Kural) - 520

குறள் (Kural) 520
குறள் #520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

பொருள்
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

Tamil Transliteration
520 Naatorum Naatuka Mannan Vinaiseyvaan
Kotaamai Kotaa Thulaku.

மு.வரதராசனார்

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர்

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க. ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும் , திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும் , அவையில்லாதாரை வெளிப்படையாகவும் , ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும் . அரசன் எப்போதும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமுமாகிய வினைசெய்வாரைக்கொண்டே ஆட்சி நடாத்துதலால் , 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார் . மன்னன் இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது , அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. வினைசெய்வான் வகுப்பொருமை. 'உலகு' உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.

மணக்குடவர்

வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal)