குறள் (Kural) - 464

குறள் (Kural) 464
குறள் #464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

பொருள்
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

Tamil Transliteration
Thelivi Ladhanaith Thotangaar Ilivennum
Edhappaatu Anju Pavar.

மு.வரதராசனார்

கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

கலைஞர்

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

பரிமேலழகர்

தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; தெளிவு இலதனைத் தொடங்கார்- வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார். தொடங்கின் இடையில் மடங்கவும் தோல்வியடையவும் நேரு மாதலின் ' தொடங்கார்' என்றார். இழிவு தோல்வியடைந்து கெடுவதுடன் உலகோர் கூறும் பழியால் நேர்வது.

மணக்குடவர்

ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

புலியூர்க் கேசிகன்

தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒரு போதும் தொடங்க மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai)