குறள் (Kural) - 1286

குறள் (Kural) 1286
குறள் #1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

பொருள்
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

Tamil Transliteration
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai.

மு.வரதராசனார்

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

சாலமன் பாப்பையா

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

கலைஞர்

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

காணுங்கால் தவறாய காணேன்-கணவரை யான் காணும்பொழுது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன்-அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளையல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன். முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமையாற் புலந்திலேன் என்பதாம் . கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்தது.

மணக்குடவர்

அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

புலியூர்க் கேசிகன்

என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal)