குறள் (Kural) - 571

குறள் (Kural) 571
குறள் #571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

Tamil Transliteration
Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku.

மு.வரதராசனார்

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

கலைஞர்

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

பரிமேலழகர்

கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது. ('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங்காரிகை உண்மையான்-கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே ; இவ்வுலகு உண்டு- இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது. கண்ணோட்டம் மக்களெல்லாரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பேனும் , அரசருக்கு இன்றியமையாது வேண்டுவதாம்.நாடுமுழுதும் அரசன் கையிலிருத்தலால்,அவனிடத்திற் கண்ணோட்டமுண்மை குடிகள் இன்பமாக வாழ்வதற்கும் ,இன்மை ஏமமின்றி மாள்வதற்கும் ஏதுவாம். அகத்தழகு புறத்தழகு என அழகு இருவகைத்தாதலின், கண்ணோட்டம் காரிகையெனப்பட்டது.மேலும் அதன் சிறப்பு நோக்கி 'கழிபெரு' என ஈரடையுங் கொடுக்கப் பெற்றது. இது மீமிசைச் சொல். "கண்ணோட்டம்...உண்டிவ்வுலகு". என்பது,"உண்டாலம்ம விவ்வுலகம் .....பிறர்க்கென முயலுநருண்மை யானே". (புறம். 182) என்பது போன்றது.

மணக்குடவர்

கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது. இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (Kannottam)