குறள் (Kural) - 424

குறள் (Kural) 424
குறள் #424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

Tamil Transliteration
Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu.

மு.வரதராசனார்

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

சாலமன் பாப்பையா

அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.

கலைஞர்

நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

பரிமேலழகர்

தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு. (உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எண்பொருளவாகச் செலச் சொல்லி-பிறருக்குச் சொல்லும்போது அரியபொருள்களையும் எளிய பொருள்களாக அவர்க்கு விளங்குமாறு சொல்லி; தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு -தான் மட்டும் பிறர்வாய்க் கேட்கும் அருஞ்சொற்களின் நுண்பொருளை எளிதாய் அறிந்து கொள்வது அறிவாம். பொருளை அறிவிக்கும் வாயில் சொல்லேயாதலாலும், அரிய பொருளை எளிதாக்குவதும் எளிய பொருளை அரிதாக்குவதும் சொல்லின் தன்மையைப் பொறுத்திருத்தலாலும் , 'எண்பொருள வாகச் செலச்சொல்லி ' என்றார். 'வாய் ' ஆகுபெயர். அறிவு என்றது அறிவுடைமையை.

மணக்குடவர்

அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது. இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.

புலியூர்க் கேசிகன்

கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)