குறள் (Kural) - 1313

குறள் (Kural) 1313
குறள் #1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

Tamil Transliteration
Kottup Pooch Chootinum Kaayum Oruththiyaik
Kaattiya Sootineer Endru.

மு.வரதராசனார்

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா

ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

கலைஞர்

கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

பரிமேலழகர்

(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்;'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகள் புலவிக் குறிப்பைக் கண்டு நீவிர் கூடியொழுகிவரவும், இது நிகழ்தற்குக் கரணகம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - இம்மருத நிலத்து நீர்ப் பூவும் கொடிப்பூவு மன்றி வேற்று நிலத்துக் கோட்டுபூவைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற் காதலிக்கப்பட்ட வேறொருத்திக்கு இப்பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீரென்று சீற்றங் கொள்வாள் என் காதலி இத்தகையாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ? கோட்டுப்பூ மரக்கிளைகளில் மலர்வது. கோடு - கிளை. வேற்று நிலம் முல்லை குறிஞ்சி நெய்தல். கோட்டுப் பூவைக் கோடுதலைச் செய்யும் மாலை என்றார் பரிமேலழகர். ஆசிரியர் மாலையென்னாது பூவென்றமையாலும், "கோடுதலைச் செய்யும்" என்னுங் கருத்தில் ஒருசிறப்பு மின்மையானும், அது உரையன்மை அறிக.

மணக்குடவர்

பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

புலியூர்க் கேசிகன்

மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள்

பால் (Paal)காமத்துப்பால் (Kaamaththuppaal)
இயல் (Iyal)கற்பியல் (Karpiyal)
அதிகாரம் (Adhigaram)புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)