குறள் (Kural) - 106

குறள் (Kural) 106
குறள் #106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

Tamil Transliteration
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu.

மு.வரதராசனார்

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

சாலமன் பாப்பையா

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

கலைஞர்

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

பரிமேலழகர்

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க-மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க. மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.

மணக்குடவர்

தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

புலியூர்க் கேசிகன்

மனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)