குறள் (Kural) - 342

குறள் (Kural) 342
குறள் #342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

பொருள்
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

Tamil Transliteration
Ventin Un Taakath Thurakka Thurandhapin
Eentuiyar Paala Pala.

மு.வரதராசனார்

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

சாலமன் பாப்பையா

பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

கலைஞர்

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

பரிமேலழகர்

துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துறந்தபின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையுந் துறந்தபின் ஒருவர்க்கு இம்மையில் உண்டாகக் கூடிய நன்மைகளும் பலவாம் ; வேண்டின் உண்டாகத் துறக்க-அவற்றை விரும்பின் காலம் இருக்கும்படி விரைவில் துறக்க. நன்மைகள் மனவமைதியும் நன்னெறிச்செலவும் முதலியன. நீண்ட காலத்திற்கு முன் துறந்தவன் நீண்டகாலம் அந்நன்மைகளைப் பெறுவானாதலின், 'உண்டாகத்துறக்க' என்றார். நன்மைகள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. துறவால் துன்பமின்மை மட்டுமன்றி இன்ப முண்மையும் உண்டாம் என்றவாறு.

மணக்குடவர்

தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)துறவு (Thuravu)