குறள் (Kural) - 239

குறள் (Kural) 239
குறள் #239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

Tamil Transliteration
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam.

மு.வரதராசனார்

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

கலைஞர்

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

பரிமேலழகர்

இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழைச் செய்யாத வுடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும். உயிரோடு கூடியிருந்தும் அதனாற் பயன் பெறாமையின் 'யாக்கை' என்றார். மக்களின் தன்மைக் கேற்ப அவர் வாழும் நிலமுமிருக்கும் என்பது, "எவ்வழி நல்லவ ராடவ-ரவ்வழி நல்லை வாழிய நிலனே". என்னும் (புறம். 188) ஒளவையார் கூற்றானும் அறியப்படும். இனி, உடம்பு பெரும்பாலும் நிலத்தின் கூறாதலின், தன்னைப் போற் பயன்படாத தன் கூற்றைச் சுமப்பது தனக்கிழி வென்னும் வெறுப்பினால் நிலம் தன்வளங் குன்றும், எனவும் ஒரு கருத்துத் தோன்ற நின்றது. பயன் குன்றும் என்பது பயன்படும் என்பது போல ஒரு சொற்றன்மைப் பட்டதாகும்.

மணக்குடவர்

புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

புலியூர்க் கேசிகன்

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புகழ் (Pukazh)